பாவி பரமசுதன் தாவிஉனைத் தயவாய் கூவி


131. தமிழ் இராகம்                       (111)

பல்லவி

                   பாவி பரமசுதன் தாவிஉனைத் தயவாய் கூவி
                        அழைக்கிறார் இதோ வாராயோ - ஓ

அனுபல்லவி

                        பூவின் பாவப் பாரத்தை மேவிச் சுமந்து தீர்த்த
                        தேவாட்டுக்குட்டி இதோ பார் பார் பார்  - ஓ பாவி

1.         ஜென்மபாவத்தினோடு கன்மபாவமு முன்னை
            சின்னப்படுத்திதைப் பார் பார் பார் - உனின்
            நன்மை ஏதுமில்லாத தன்மை அதை அறிந்து
            நன் மணவாளனேசுவைச் சேர் சேர் சேர்                         - ஓ பாவி

2.         சிற்றொளி தீபம் சுற்றிப்பறந்து நிற்கும்
            சிற்றுயிர் புட்கள் தனைப்போலவே - உனைச்
            சுற்றி உலகளிக்கும் சிற்றின்பமான சுகம்
            தொற்றிப் பாவி நீ கெட்டாய் சாலவே                             - ஓ பாவி

3.         எத்தனை தானதர்மம் நித்தம் பூசைபலிகள்
            அத்தனையாலும் பாவம் தீராதே - பரி
            சுத்தன் ஏசுவின் திருரத்தம் பாவக்கறையை
            சுத்திகரித்திடும் நீ சேராயோ                                        - ஓ பாவி

4.         தந்தைப் பிதா தமது சொந்தக் குமாரன் தனை
            தந்து உலகினை புரந்தாரே - நீயும்
            சொந்த சேயனாகவே உந்தன் விசுவாசத்தால்
            சொந்தம் உண்டாகுமென்று பகர்ந்தாரே                        - ஓ பாவி

5.         நீடிய பாவமன்னிப்போடுமே பரிசுத்தம்
            நித்திய ஜீவனுமுன் பங்காமே - இன்பம்
            நாடி ஜீவகிரீடம் சூடிப் பராபரனைப்
            பாடி மகிழ்வதுமுன் பங்காமே                                         - ஓ பாவி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு