சுத்தம் தரவே மருந்தொன்றிருக்குது


150.  இராகம் (எந்தன் நிர்ப்பந்தம் பாரும் என் மக்களே)                  (306)
செஞ்சுருட்டி                                                        பிலந்தி தாளம்

பல்லவி

          சுத்தம் தரவே மருந்தொன்றிருக்குது,
          சித்திக்கும் பக்தருக்கே

அனுபல்லவி

            மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளத்தை
            மாற்றலாகா நாற்றம் போகா

1.         பாதாதிகேச பரியந்தமும் பாவப் பாச விஷமுள்ளவன்
            பாதக ஜென்மியாய்ப் பாதாள லோகத்தின் பாத்தியத்தை உள்ளவன்
            பாமரமாகவே பாராமல் மந்திர பக்குவமுள்ளவன் - வீணாய்
            பாரதமும் ராமாயண விசுவாசம்
            பாரில் பரிசுத்தம் தராதிது சத்தியம்                  - சுத்தம்

2.         சரியை கிரியை இருபத்திநாலையும் சரியாய் அனுசரிப்பாய்
            அறியாமல் நாலெட்டறங்களையும் அனுஷ்டானித்துமே வருவாய்
            சரிதை சிவ சைவ தத்துவ வேதங்கள் சர்வம் தெரிந்துரைப்பாய் - உனை
            மருவுமிருதய மாயமதையிருள்
            அறுதியானாலல்லோ உறுதியாகும் நல்ல           - சுத்தம்

3.         ஆண்ட பொருளை அறியாதார் நற்கிரியை மாண்டமர மணைமண்
            ஆன்றோர் இருதய ஆற்றலை மெச்சிய சான்றுமநேக முண்டே
            வெண்கல ஓச்சத்தால் பொன் பிரகாசத்தால் அன்னதற்கென்ன பயன் - உனை
            ஆண்டு நடத்தும் அகமருளற்றிட
            வேண்டும் நற்குணம் தாண்டும் துர்க்குணம்

4.         நீக்கமறா மனத்தீக்குணத்தை முதல் நீக்க வழி பாராய்
            வீக்கமுறு உளச்சீக்கை அகற்றிட ஏக்கமுற்றே திவாய்
            ஊக்கமுறு வேதம் தூக்கி ஆராய்ந்திடும் தேக்கும் சுகம் பெறுவாய் - அப்போ
            நோக்கும் கிரியையில் ஆக்கமுளதென்றும்
            போக்கும் மன இருள் பேராக்கம் தருமருள்

5.         எத்திசையோரும் வந்தித்து நின்றுமே சிந்தித்திடும் மருந்தாம்
            பந்தவினைகள் பறந்தோடச்செய்ய தகுந்த மருந்திதுவாம்
            சிந்தை மெலிந்து தினந்திரிவோர்க்கிது தேன் போன்ற தினமருந்தாம் - தினம்
            அந்தரம் பூமியடங்கலும் மாந்தர்கள்
            தின்றாலும் கொஞ்சமும் குன்றாது ரஞ்சிதம்

6.         ஆனந்த லோகத்தமர்ந்த பேரின்ப ஆண்டகையின் மருந்து
            தானத்தில் வந்து தழைத்துப் பழுத்த தயையினருள் மருந்து
            கானகத்தில் வந்து கருத்திலே நின்றுகனிந்திடு நன் மருந்து - தீய
            கன்மத்தால் தீராத குன்ம வியாதியை
            இக்கணமே துரத்தும் இயேசென்னும் மருந்து.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு