ஆண்டவர் பங்காகவே தசம பாகம்


தசம பாகம் தாரும்

273. (300) பியாகு                                                    ரூபகதாளம்

பல்லவி
            ஆண்டவர் பங்காகவே, தசம பாகம்,
            அன்பர்களே, தாரும்;-அதால் வரும்
            இன்பந்தனைப் பாரும்.

அனுபல்லவி

                        வான்பல கணிகளைத் திறந்தாசீர்
                        வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
                        நான் தருவேன், பரிசோதியுங்களென்று
                        ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால். - ஆண்டவர்

சரணங்கள்

1.         வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்
            விண்ணவர் கோமானே-அந்த
            மேதகத்தை[1] நன்றி ஞாபகஞ் செய்திட
            விதித்தது தானே,
            வேதனம்[2] வியாபாரம், காலி, பறவையில்,
            வேளாண்மை, கைத்தொழில், வேறு வழிகளில்,
            ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்
            உத்தமமாகப் பிரதிஷ்டை பண்ணியே. - ஆண்டவர்

2.         ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய,
            அதற்குளதைப் பேண,-தேவ
            ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
            ஓதும் நன்மை காண,
            ஏழைகள், கைம்பெண்கள், அனாதைப் பாலகர்கள்,
            ஏதுகரமற்ற ஊனர், பிணியாளர்,
            சாலவறிவு நாகரீக மற்றவர்
            தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட - ஆண்டவர்

3.         நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
            யாவும் நமக்கீந்து,-நல்ல
            இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து
            இவ்வா றன்புகூர்ந்து,
            நன்மை புரிந்த பிதாவைக் கனம்பண்ண
            நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும்
            சம்மததே அதிலும் தசம பாகம்
            தாவென்று கேட்கிறார்; மாவிந்தை யல்லவோ? - ஆண்டவர்

- ஜி.சே. வேதநாயகம்


[1] மேன்மை
[2] சம்பளம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு