வேதமே என்ன சொல்லுவேன்


வேதமே என்ன சொல்லுவேன்?

249. கமாஸ்                                                   ஆதி தாளம்

பல்லவி 
            வேதமே, என்ன சொல்லுவேன்?-நின் மாட்சியை.

அனுபல்லவி
            சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப்
            பாதமுறும் நெறி யோது மொரே சத்ய. - வேத

சரணங்கள்
1.         கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம்;
            காந்தி நற்பனி மழை கசிந்திடும் வானம்;
            புண் மனமுடை யோர்க்குப் புகழருந் தானம்;
            புசித்திடக் கசித்திட ருசித்திடும் பானம். - வேத

2.         சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார்
            தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார்
            அறிஞர்கள் அல்லவர் ஆடவர் மெலியார்
            அனைவரும் அருந்திட அருந்திடச் சலியார். - வேத

3.         கனபல மருளுவாய், தினந்தினங் காலை
            களைப்பினைப் போக்குவாய், களைப்புறு மாலை
            தினமென திதயமே திருத்தலுன் வேலை,
            செப்பருங் கனிதருங் கற்பகச் சோலை. - வேத

4.         அகமுறு மானைகள்[1] விழுந்து தள்ளாடும்;
            அருள்நதி ஆடுகள் நடந்துனி லோடும்;
            தகவுனின் கரைகளில் குருவிகள் கூடும்;
            தருக்கள் செழித்திருக்கும் தாசர்கள் நாடும். - வேத

5.         பொன் அபரஞ்சியிலும்[2] உன் விலை பெரிதே!
            பூவுலகினிலுனக் குவமைக ளரிதே;
            நின்னை யசட்டை செய்வோர் நிலைமிக வறிதே!
            நின்படிப் பறியாதோர் கல்விமா சிறிதே! - வேத

6.         இருபுறங் கருக்குவாள் தனிலும் நீ கூரே!
            இகபரம் ரண்டிற்கும் உன்வழி நேரே!
            கிருபை எத்தனமுனக் கேற்ற நற்பேரே!
            கிறிஸ்துவின் அருள்தனை எனக்கு நீ வாரே![3] – வேத

- ஞா. சாமுவேல்


[1] யானைகள்
[2] புடமிட்ட பொன்னிலும்
[3] பொழிவாய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு