ஆலயம்போய்த் தொழவா ருமென்ற


ஆலயம் போய்த் தொழ வாரும்

289. ஆனந்தபைரவி                                       ஆதிதாளம்

பல்லவி

            ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி
            ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்,

அனுபல்லவி

            ஆலயந்தொழுவது சாலவும்[1] நன்றென
            ஆன்றோருரை[2] நெறி சான்ற வர்க்கானதே,
            ஆவலாயதிகாலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன் - ஆலயம்

சரணங்கள்

1.         பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
            பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்;
            முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
            முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு[3]
            மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன்
                        மாட்சி காணவே. - ஆலயம்

2.         பூர்வமுதல் தொழும்பர் போந்தாலயந்[4] தொழுதார்
            புனித சுதனும் நமக்கினு முன் மாதிரி தந்தார்;
            ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்;
            ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்;
            ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி. - ஆலயம்

3.         தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று;
            சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று;
            இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
            இலகு சுடர்கள்போல உலகுக்கொளியே தந்து
            எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில் ஒன்றவே திரு. - ஆலயம்

- ஜி.சே. வேதநாயகம்


[1] மிகவும்
[2] ஞானிகள் உரைத்த வழி
[3] சொல்லி
[4] போந்த=வந்து

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு