என்னோ பல நினைவாலும் நீ உன்னை


என்னோ நீ உன்னை அலைக்கழிப்பாய்

233. (252) செஞ்சுருட்டி                           ரூபகதாளம்

பல்லவி
            என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய்.

அனுபல்லவி
                        மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு உன்
                        மன்னவராய் இருக்கையிலே. - என்

சரணங்கள்
1.         அன்னை யிடத்துருவாய், உன்னை அமைத்த தந்தை அல்லவோ?-பின்னும்,
            ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ? -என்

2.         மாதானவள் சேயை[1] ஒரு வேளை மறந்தாலும்,-உன்னை
            மறவோம் ஒருகாலும், என வார்த்தை கொடுத்தாரே - என்

3.         இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர் என நினையேல்;-அவர்
            நிசமாக உன் வலப்பாகத்தில் நிழல் ஆவர் என்றறிவாய். - என்

4.         சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன் தேசம் எங்கும்
                        சுற்றிப் பார்த்தும்,-தேவ
            சேயர்கள் பட்டினியாகக் காணேன், என்ற திவ்ய உரையும்
                        பொய் யாமோ? - என்

5.         தேகமும் கெட்ட உலகமும் பேயும் திரண்டு உனைப் பொருதாலும்[2] - அதை
            ஜெயித்தயேசு உன் மன்னவ ராகையில் சிந்தனை வேறென்ன உனக்கு? - என்

6.         தேவ பிதா நின் பிதாவும் இயேசு நின் சிநேகிதரும் சுத்த ஆவி-உன்றன்
            தேற்றர வாளனும் ஆவதைப் பார்க்கிலும், தேவை நினக் கொன்றும் இல்லையே. - என்

- சவரிமுத்து உபாத்தியாயர்

[1] பிள்ளையை
[2] சண்டை செய்தாலும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு