உன்றன் திருப்பணியை உறுதியுடன்


உன்றன் திருப்பணி

271. மோகனம்                                                         சாபுதாளம்

பல்லவி
                   உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய
                   உதவாத பாவி நானே.

அனுபல்லவி

            அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு
            வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு - உன்றன்

சரணங்கள்

1.         வேதனத்தின்[1] பொருட்டோ, மேலவர் நிமித்தமே
            வெளியிட் டறிக்கை செய்யவோ?-உல
            காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்
            அடைந்து ப்ரகாசிக்கவோ?
            ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்
            நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ? - உன்றன்

2.         வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டு
            வெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப்
            பான முணவுபிந்த பலபிணி வருமென்ற
            பயத்தாலே நித மஞ்சினேன்;
            கானகம்[2] மலைசென்று கடும்பணி குளிர் வென்று
            போனகம் நீரகன்று புவியி லுழைத்த யேசு. - உன்றன்

3.         காடோ, மலை நதியோ, கடலோ, கடந்தலுத்துக்
            கஸ்தி மிகவே அடைந்து,-உடல்
            பாடுங் கவலை நோயும் பசியும் நிருவாணமும்,
            பகைவர் திருடர் மோசமும்,
            சாடக் கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்
            ஓடத்தனை யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே. - உன்றன்

4.         வண்டி வகைகளோடு வாழ்ந்தும் எனது கூடு
            மயங்கி அயர்ந்து வாடுதே,-இனி
            என்று மிருப்பிடத்திலிருந்து பணி புரிய
            இசைந்தென் மனது நாடுதே;
            ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று,
            நன்றே நிதம்புரிந்த நரனே பரனே யேசு. - உன்றன்

- ஜி.சே. வேதநாயகம்


[1] சம்பளத்தின்
[2] காடு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு