ஒருபோதும் மறவாத உண்மைப்


          ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
            உனக்கென்ன குறை மகனே - ஒரு

பல்லவி

                        சிறுவந் தொட்டுனை யொரு
                        செல்லப் பிள்ளை போற் காத்த
                        உரிமைத் தந்தை யென்றென்றும்
                        உயிரோடிப்பா ருன்னை                        - ஒரு

சரணங்கள்

1.         கப்பலின் அடித்தட்டில் - களைப்புடன் தூங்குவார்
            கதறுமுன் சத்தங்கேட்டால் - கடல் புயலமர்த்துவார்
            எப்பெரிய போரிலும் - ஏற்ற ஆயுதமீவார்
            ஏழைப்பிள்ளை எல்லோருக்கும் - ஏற்ற தந்தை நானென்பார்     - ஒரு

2.         கடல் தனக் கதிகாரி - கர்த்தரென்றறிவாயே
            கடவாதிருக்க வெல்லை - கற்பித்தாரவர் சேயே
            விடுவாளோ பிள்ளையத் தாய் - மேதினியிற் றனியே?
            மெய்ப்பரனை நீ தினம் விசுவாசித்திருப்பாயே                            - ஒரு

3.         சிலபோது தரித்திரத்தால் - நோயால் வருத்துவார்
            சிட்சித் துருக்கினாலும் - சிறந்த பொன்னாக்குவார்
            பல பாடுனக்கென்றாலும் - பலன் பெறாத் திருத்துவார்
            பட்சம் நிறைந்த கையை - முத்தி செய் இலகுவாய்                  - ஒரு

4.         உன்னாசை விசுவாசம் - ஜெபமும் வீணாகுமா
            உறக்க மில்லாதவர் கண் - உன்னை விட்டொழியுமா
            இந்நில மீதிலுனக் கென்ன வந்தாலும் சும்மா
            இருக்குமா அவர் மனம் - உருக்கமில்லாதே போமா?                - ஒரு

5.         உலகப் பேயுடலாசை - உன்னை மோசஞ் செய்யாது
            ஊக்கம் விடாதே திரு - உள்முனை மறவாதே
            இலகும் பரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது
            என்றும் மாறாத நண்பன் - இரட்சகருடன் சேர்ந்து                    - ஒரு
-ச. முத்துசாமி உபாத்தியாயர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு