கல்வாரி மலையோரம் வாரும்


கல்வாரி மலையோரம் வாரும்

55. ஆனந்தபைரவி                                         ரூபகதாளம்

பல்லவி

                   கல்வாரி மலையோரம் வாரும்,
                   பாவம் தீரும்.

அனுபல்லவி

            செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே

சரணங்கள்

1.        லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு,
           நொம்பலப்[1] படவைக்க ஐயன்மேல் உருண்டு,
           தாகத்தால் வாடில்வாடிக் கருகியே சுருண்டு,
           சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு,
           சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா[2] - ஜோதி - கல்

2.        ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ?
           உபகாரம் பரிகரம் சிதையவும் ஆச்சோ?
           விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ?
           மேனியெல்லாம் வீங்கி விதனி[3]க்கலாச்சோ?
           மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே - ஜோதி - கல்

3.        மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்குவதுமேனோ?
           மதுரிக்கும் திருநாவு வறண்டதுமேனோ?
           தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ?
           ஜலத்தில் நடந்த பாதம் சவண்டது[4] மேனோ?
           சண்டாளர்கள் நம்மால்தானே, நம்மால்தானே - ஜோதி - கல்

4.        ரட்சகனை மறந்தால் ரட்சண்யம் இல்லை,
           நாமக்கிறிஸ்தவர்க்கு இருபங்கு தொல்லை,
           பட்ச பாதம் ஒன்றும் பரதீசில் இல்லை,
           பரதீசில் பங்கில்லோர்க்குப் பாடென்றும் தொல்லை,
           பந்தயத்திலே முந்தப் பாரும், முந்தப் பாரும் - ஜோதி - கல்

- ரத்ன பரதேசியார்


[1] துன்பம்
[2] தந்தை
[3] துயருடைய
[4] துவண்டது

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு