பாருங்கள் தொடர்ந்து வாருங்கள் கொல்கதா


பாருங்கள், தொடர்ந்து வாருங்கள்

58. முகாரி                                 ஆதிதாளம்

பல்லவி

            பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா
            பாதையிற், கோதையரே.

அனுபல்லவி
            ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை
            மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள்[1] படுகின்றார் - பாருங்கள்

சரணங்கள்

1.         பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே,
            புங்க[2] உடலெல்லாம் புழுதிகள் படியுதே,
            நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே,
            நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. - பாருங்கள்

2.         பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே,
            பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே,
            நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக் கரியுதே,
            நடையு முடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே. - பாருங்கள்

3.         திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே,
            செங்குரு திகளெல்லாம் பொங்கி வடிந்ததே,
            சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே,
            ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே. - பாருங்கள்

4.         துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகின்றார்,
            துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார்,
            அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார்,
            அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார் - பாருங்கள்

- வே. சாஸ்திரியார்


[1] துன்பங்கள்
[2] சிறந்த

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு