மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம்


மாட்சிமையான காட்சியைப் பார்க்கலாம்

62. (105) கேதாரகௌளம்                      ஆதிதாளம்

பல்லவி

            மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம்,
                        வா,-ஆ! கல்
            வாரிச் சிலுவையில் வானவன் தொங்கின்ற
            மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம், வா

அனுபல்லவி

          சூட்சமுறு தேவ சாட்சியாங் கற்பனை
            துய்யத்தை[1] நரர் மீறி - மகா
            துர்க்குணப் பேயின் தந்திரத்தினால்
            தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர்;
            சுத்த கிறிஸ்தரசன்,-தேவனுட
            சித்தன், அமை சிரசன், மாந்தர்களின்
            துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும்,
            தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்கின்ற - மாட்

சரணங்கள்

1.         எருசலை நகர் மருவுங் கல்வாரி
            என்னப்பட்ட ஒரு மேடு;-அதில்
            ஏசுக்கிறிஸ் தெனும் நேசமகத்துவன்
            எங்களுக்காய்ப்படும் பாடு-மரக்
            குருசில் ஏறியே சிரசில் முண்முடி
            கொண்டதும் நொந்ததும் நீடு - அப்போ
            கொற்றவன்[2] தன்முகம் சற்றேனுங் காட்டாத
            குறையதும் ஒரு பீடு;
            குருதி வடியவே, சுருதி முடியவே,
            பருதி மறையவே, திரையுங் கிழியவே,
            கொலைஞர் அவமதிக்க,-துஷ்டனாம்
            அலகை[3] மனங்கொதிக்க, கசப்புடன்
            கோனே, என்னை நீர் ஏனோ கைவிட்டீர்?
            கொடுக்கிறேன் ஜீவனை, எடுத்திடு மென்றழும் - மாட்சி

2.         பூலோகத்தாரே, இம்மேலான காட்சியின்
            புண்ணியத்தை வந்து பாரும்;-தேவ
            புத்திரன் பக்கத்தில் குத்துண்டு பாய்கின்ற
            புனித ரத்தமும் நீரும்-நமை
            மேலோகஞ் சேர்க்கின்ற சாலக்கிருபையின்
            விஸ்தார ஊற்றென்று சேரும்;-அதில்
            விழுந்து ஆத்துமம் முழுகிப் பாவந் தீ
            வினை அகன்றிட வாரும்;
            சீலமற்ற மாந்தர் கோல முற்ற வேந்தர்
            ஜீவனாதிபதி சாவினாலே நம்மைத்
            தெய்வ லோகஞ் சேர்க்க-நித்தியமாய்
            உய்யும் சுத்தோராக்கத்-தேவசுதன்
            செல்வக் கிறிஸ்தந்தக் கல்வாரி மேட்டினில்
            ஜீவன் துடிக்கத்தம் ஆவி விடுகின்ற - மாட்சி


[1] பரிசுத்தத்தை
[2] கடவுள்
[3] பேய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு