23 January 2019

என்தன் பரம குரு செய்த உபகாரத்தை


ஏத்தித் துதிப்பேனே

79. (8) ரீதிகௌளை                                       சாபுதாளம்

பல்லவி

                        என்தன் பரம குரு செய்த உபகாரத்தை
                        ஏத்தித் துதிப்பேன் நானே.

அனுபல்லவி
                        தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச்
                        சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான - என்

சரணங்கள்
1.         வானத் தமலர்[1] சேனை கிரகித்து முடியாத
            மகிமைப்ர தாபம் மிகுத் தோன்,-அதி
            ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த
            யாவும் நெறியில் பகுத்தோன்,
            மேன்மை பொருள தாகத் தேவ மகத்துவத்தின்
            விளங்கும் அனந்த சுகத்தோன்,-அக்கி
            யானத் திருள் அகலத் தான் இப்புவியில் உற்ற
            அந்த முடி வில்லாத சுந்தர கிறிஸ்துநாத - என்

2.         மிக்கப் பராபரனோ டொக்க ஒன்றித்திருந்த
            முக்கியம் அனைத்தும் விடுத்து,-ஏவை
            மக்கள் துயர் அகலத் துக்க உலகமதில்
            மனுடாவதாரம் எடுத்து,
            பக்ஷமாக அடிமைக் கோலம் கொண்டரும்
            பாடு பட்டுயிர் கொடுத்து,-நரர்
            அக்கிரமம் அனைத்தும் நிக்கிரகம் புரிந்து,
            அந்தகாரம் அற வந்த யேசுகிறிஸ்து - என்

3.         பாவத் திகில் அறுத்துச், சாபத்தையும் தொலைத்து,
            பகைஞன் வினையை நீக்கிக்-கொடும்
            ஆபத்திலும், அடர்ந்த கோபத்திலும் விழுந்த
            அடிமைகளைக் கை தூக்கி,
            தேவத்திரவியம் என்ற ஜீவ போஜனத்தைத்
            திருவுள மாய் உண்டாக்கி,-நித்தம்
            மாபத்தி ரமாய்ப் பிரதாபித் தனுக்ர கித்து,
            வைத்துக் காத்த ஒரே நித்திய திரித்வமான - என்

- வே. சாஸ்திரியார்


[1] பரிசுத்தர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...