சுந்தரப் பரம தேவ மைந்தன்


தேவ மைந்தனுக்கு நித்திய கீர்த்தனம்

98.     (303) சங்கராபரணம்                                       ஆதிதாளம்

பல்லவி

            சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
            தோத்திரம், புகழ்ச்சி நித்திய கீர்த்தனம் என்றும்!

அனுபல்லவி

            அந்தரம்[1] புவியும் தந்து, சொந்த ஜீவனையும் ஈந்து
            ஆற்றினார்; நமை ஒன்றாய் கூட்டினார்; அருள் முடி
            சூட்டினார்; கிருபையால் தேற்றினாரே, துதி - சுந்தரப்

சரணங்கள்

1.         பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
            பாவிகளான நமை உசாவி[2] மீட்டாரே;
            வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த
            மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,
            கோதணுகா[3] நீதிபரன் பாதமதின் ஆதரவில்
            கூடுங்கள்;-பவத்துயர்
            போடுங்கள்;-ஜெயத்தைக் கொண்
            டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள், பாடுங்கள் என்றும் - சுந்தரப்

2.         விண்ணிலுள்ள ஜோதிகளும், எண்ணடங்காச் சேனைகளும்
            விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே,
            மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
            வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே,
            அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக்கொண்
            டாடிட,-அவர் பதம்
            தேடிட,-வெகு திரள்
            கூடி டத்துதிபுகழ் பாடிடப், பாடிட என்றும் - சுந்தரப்

3.         சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்
            சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே,
            எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
            ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே,
            உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,
            உயர்ந்து-வாழ, தீயோன்
            பயந்து-தாழ, மிக
            நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான், நயந்தான் என்றும் - சுந்தரப்

- மரியான் உபதேசியார்


[1] வானம்
[2] தேடி
[3] குற்றமற்ற

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு