சொல்லிவந்துன் பாதம் புல்லினேன்


27. (197 Y)   உன் பாதம் புல்லினேன்

ஆனந்தபைரவி                                              ஆதி தாளம்
பல்லவி
          சொல்லிவந்துன் பாதம் புல்லினேன், பரனே, நீயும்
          தூரமாகாதாள்வாய், நேசனே.

அனுபல்லவி
            எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து
            கல்லு மனமும் கரைந்து காதல் கூருமே உகந்து. - சொல்

சரணங்கள்
1.         இரும்பு நெஞ்சமும் குழையாதோ?-ஏழை கூப்பிட்டால்
            இறையோனே காதில் நுழையாதோ?
            திரும்பி என்துயர் களையாயோ?-உன் திருவடி
            சேர்க்க என்றனை அழையாயோ?
            அரும்பி விழுங் கண்ணீர் ஆறாய், அலைபுரளும் தன்மை தேறாய்;
            விரும்பி நீ வா என்று காறாய், மெய்யனெ நின்னருட் பேறாய். - சொல்

2.         சந்ததம் உனையே நம்பினேன்,-சத்துருப்பேயின்
            சற்பனையால் மனம் வெம்பினேன்.
            சொந்தம் நான் உனக்கியம்பினேன்,-நினைக்காணாதே
            துக்கமே விடத்ததும்பினேன்.
            பந்தமாமெ வையும் மாளப் பற்றெலாமுன் பாதத்தேறச்
            சிந்தை உன்னருளே வீறச் சீவன் முத்தி சேர்ந்தே யாறச் - சொல்

3.         ஆரிடத்தென் குறை சொல்லுவேன்-ஈசா. வேறே
            ஆரைத் தஞ்சமாகப் புல்லுவேன்?
            சேரிடத் தெவ்விதம் சொல்லுவேன்?-முப்பகை செய்யும்
            தீமையை எப்படிச் சொல்லுவேன்?
            பாரிடத்து வந்த பாதா, பாக்ய வேதவாக்ய போதா,
            சீரனைத் தினுக்கு மேதா, திவ்விய சற்குரு நாதா. - சொல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு