அடைக்கலம் அடைக்கலமே ஏசுநாதா உன்
223. சங்கராபரணம் ஆதி தாளம் (166)
பல்லவி
அடைக்கலம்
அடைக்கலமே ஏசுநாதா உன்
அடைக்கலம் அடைக்கலமே
அனுபல்லவி
திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு
1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே
அன்புள்ள பிதாவுனை விட்டகன்று பிரிந்தேனே
மோசமதையே அலால்மற்றொன்றையும் காணாமலே என்
தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள் - அடைக்கலம்
2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம்போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்
கெட்டவனே போவெனக்கிளத்தினும் நியாயமே
கிட்டி வந்தழும் ஏழைக்கெஞ்சுதல் கேளய்யனே!
- அடைக்கலம்
3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துருகெனது மனச்சஞ்சலமகற்றிடும்
பஞ்சமா பாவியினது கெஞ்சிடும் கரத்தினை
எந்தவிதமும் தள்ளாமல் இரங்கிடுமையனே! - அடைக்கலம்
4. பெருவெள்ளத்துக்குத் தப்ப பேருதவி நீயல்லோ
பருதி தருவெயிற்குப் பரமசகாயமே
குருதி சிந்தி உயிர்த்த கோதில்லாத நாயனே
நெருக்கப்படுமெனக்கு நீ உதவி அல்லவோ? - அடைக்கலம்
5. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றுனது பக்கமதில் ஆயிருந்த கள்ளனுக்கு
இன்று பரதீசி லிருப்பா யென்றுரைத்தாயல்லவோ
- அடைக்கலம்
Comments
Post a Comment