சருவேசுரா ஏழைப்பாவி


என்பேரில் தயவாய் இரும்

171. (190) மோகனம்                                                சாபுதாளம்

பல்லவி

            சருவேசுரா, ஏழைப்பாவி-என் பேரிலே
            தயவாய் இரும், சுவாமி

அனுபல்லவி

திரியேக பரதேவா, நெறி மேவும் ஒரு யோவா,
சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து. - சரு

சரணங்கள்

1.         தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித் தகைமை[1]
            உலகை நேசித்தாய்;-நின்
            சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய்;
            இந்தப் பெரிய நேசம் புந்திக்[2] கொளியதாக்கும்;
            எந்தப் படியும் என் நிர் பந்தம் அனைத்தும் போக்கும்! - சரு

2.         தேவரீர்க் கேற்காத தீவினைகளைச் செய்தும் தண்டியாமல்
                        பொறுத்தீர், - நீர்
            யாவும் அறிந்திருந்தும், கோபித்துக் கைவிடாதென் நன்றி
                        கேட்டை மறுத்தீர்,
            ஜீவனே, உமக்குப் பாவி பதில் என்செய்வேன்?
            மேவி அடி தொழாமல் ஆவி எங்ஙனம் உய்வேன்? - சரு

3.         நெஞ்சில் தெய்வ பயம் கொஞ்சமேனும் இல்லாமல் நீதி வழியைக்
                        கடந்தேன்;-கெட்ட
            வஞ்ச உலக வாழ்வை மிஞ்சத் தேடிப், பேயின் மனதுக்கேற்க
                        நடந்தேன்,
            பஞ்ச பாவி கூவிக் கெஞ்சும் ஜெபத்தைக் கேளும்,
            தஞ்சம் என்றேன்; உனக்கே அஞ்சல் என்றெனை ஆளும். - சரு
- வே. சாஸ்திரியார்




[1] இவ்விதமாய்
[2] புத்தி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு