ஆரும் துணை இல்லையே


ஆரும் துணை இல்லையே

165. (184) முகாரி                                                    சாபு தாளம்

பல்லவி

            ஆரும் துணை இல்லையே, எனக்
            காதியான்[1] திருப்பாலா;-உன்தன்
            ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்
            தாளுவாய், யேசுநாதா.

அனுபல்லவி

            சீர் உலாவு பூங்காவில் ஓர் கனி
            தின்ற பாதகம் மாற்றவே,
            சிலுவை மீதினில் உயிர்விடும்
            தேவனே, என் சுவாமி. - ஆரும்

சரணங்கள்

1.         முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியே,
            முள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா, கிருபை கூர்வையே;
            சிந்தும் உன் உதிரத்தில் என் வினை தீர்த்திரட்சியும், ஐயனே;
            தீயபாவி எனக்கு வேறொரு செயலிடம் துணை இல்லையே! - ஆரும்

2.         தந்தை தாயரும், மைந்தர் மாதரும் சகலரும் உதவார்களே;
            சாகும்நாளதில் நீ அலால் எனைத் தாங்குவார்களும் உண்டுமோ?
            சொந்தம் நீ எனக்கன்றி, வேறொரு சொந்தமானவர் இல்லையே,
            சுற்றமும், பொருள் அத்தமும்[2] முழபத்தமே,[3] என் தத்தனே! - ஆரும்

3.         கள்ளனாயினும் வெள்ளனாயினும்[4] பிள்ளை நான் உனக் கல்லவோ?
            கர்த்தனே, வலப் பக்கமேவிய கள்ளனுக் கருள் செய்தையே;
            தள்ளி என்னைவிடாமல் உன்னடி தந்து காத்தருள், அப்பனே.
            தயவாய் ஒரு குருசில் ஏறிய சருவ ஜீவ தயா பரா. - ஆரும்

4.         நன்றி அற்றவனாகிலும் எனைக் கொன்று போடுவதாகுமோ?
            நட்டமே படும் கெட்ட மைந்தனின் கிட்ட ஓடினதில்லையோ?
            கொன்றவர்க் கருள் செய்யும் என்று பிதாவை நோக்கிய கொற்றவா,[5]
            குற்றம் ஏது செய்தாலும் நீ, எனைப் பெற்றவா, பொறுத்தாள்வையே. - ஆரும்

5.         பத்தியேதும் இலாது மாய சுகத்தை நாடிய பித்தனாய்ப்
            பாழிலே என்றன் நாள் எலாங் கெடுத் தேழையாகினேன், என்செய்வேன்?
            சத்ருவான பிசாசினால் வரும் தந்திரம் கொடிதல்லவோ?
            தஞ்சம் அற்றவன் ஆகினேன், உன தஞ்சல்[6] கூறும் அனாதியே. - ஆரும்

- வே. சாஸ்திரியார்


[1] முன்னவன்
[2] செல்வமும்
[3] முழு அபத்தமே
[4] வெண்ணிறத்தவன்
[5] அரசனே
[6] அஞ்சாதே என்று

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு