ஆண்டவனே கிருபை கூராய்


ஆண்டவனே கிருபைகூராய்

170. (60 L) மோகனம்                                     சாபு தாளம்

பல்லவி

                        ஆண்டவனே கிருபை கூராய்-எனக்
                        காதாரம் உன்றனின் பாதாரவிந்தம்

அனுபல்லவி

                        மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா
                        ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா! - ஆண்

சரணங்கள்

1.         துர்க்குணத்தி லுருவானேன்,-பொல்லாத்
            தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன்,
            நற்குண மென்னில்நான் காணேன்,-நித்ய
            நாச மரண நரகுக்குள்ளானேன்,
            சற்குண மன்பு தயைமிகு தேவா!
            தாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா! - ஆண்

2.         பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே,-பாவம்
            பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே,
            நோவென்னைப் பிசித்ததென் ஐயே!-எனை
            நோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யே,
            ஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோ?
            என்பாவச் சேற்றை விட்டென்னை தூக்காயோ? - ஆண்

3.         சாபத்துக்காளாய்ப் போனேன்,-சீனாய்த்
            தன்னிடி குமுறலின் சத்தங்கேட்டேனே,
            கோபத்தின் தீயைக்கண்டேனே,-தேவ
            கோஷ்ட முணர்ந்தே கலக்கமுற்றேனே,
            ஆபத்தில் நீ என் அடைக்கலம் தஞ்சம்,
            ஐயையோ எங்கோடும் என் ஏழைநெஞ்சம் - ஆண்

4.         பாடெனக்காய்ப் பட்டாயன்றோ?-என்றன்
            பத்தாநின்சாவு நான் சாவதற்கென்றோ?
            கேடென்னில் நிற்பதும் நன்றோ?-என்னைக்
            கேளாதிருக்க உன்றன் மனங்குன்றோ?
            நாடறியப் பாடு பட்டுயிர் தந்தாய்,
            நம்பினபேர்க்கா யுயிர்தங்கு சென்றாய். - ஆண்

- ஞா. சாமுவேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு