கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப்


சிலுவைமிசைக் கண்டேனே

191. ஆரபி                                          ஆதி தாளம்

1.         கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங்கருணை
            வெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சனநிதியை,[1]
            உள்ளமுவப் புறுதேனை, உயிர்க்குயிரை, உலவாத[2]
            தெள்ளமுகைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே.

2.         படிசாய்த்த[3] பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர் திரு
            மடிசாய்த்த திருமேனி வதைந்திழி[4] செங் குருதியுக,[5]
            முடிசாய்ந்த பெருமானை மூதலகை[6] தலைநசுக்கிக்
            கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே.

3.         மூவினைக்கு மும்முதலாய், மும்முதலு மொருமுதலாந்
            தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்
            நாவினைக்கொண் டேத்தரிய[7] நல்லறத்தின் தனித்தாயைத்
            தீவினைக்கோர் அருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே.

4.         மூவாத முதல்வனை, முதுசுருதி மொழிப்பொருளை,
            ஓவாத பெருங்குணத்த உத்தமனை, உலகனைத்தும்
            சாவாத படிகாக்கத் தனுவெடுத்துத்[8] துஜங்கட்டுந்
            தேவாதி தேவனையான் சிலுவைமிசைக் கண்டேனே.

5.         மறம் வளர்க்குங் களருளத்தை[9] வளமலிதண்[10] பணையாக்கி
            அறம் வளர்க்கும் அருண்முகிலின் அன்புமழை மாரிபெய்து
            புறம் வளர்க்கும் இரக்ஷிப்பின் புகழமைந்த புண்ணியத்தின்
            திறம் வளர்க்குஞ் செழுங்கிரியைச் சிலுவைமிசைக் கண்டேனே.

6.         காயொளியில்[11] கதிர்பரப்புங் களங்கமில் நீதியின் சுடரைப்
            பாயொளிகொள்[12] பசும்பொன்னை, பணிக்கருஞ்[13] சிந்தா மணியைத்
            தூயொளிகொள் நித்திலத்தைத்[14] தூண்டாத சுடர் விளக்கைச்
            சேயொளிகொள்[15] செம்மணியைச் சிலுவைமிசைக் கண்டேனே.

- ஹெ.ஆ. கிருட்டிணன்


[1] பரிசுத்த கண்ணின் செல்வப் பெருக்கை
[2] ஒழியாத
[3] பூமி சாயச் செய்த
[4] வருத்தப்பட்டு
[5] சிந்த
[6] பழைய பிசாசின்
[7] துதிக்கமுடியாத
[8] சரீரமடைந்து
[9] உவர் நிலமாகிய மனதை
[10] செழிப்பு மிகுந்த
[11] எரியுமொளிபோன்ற
[12] பரவுமொளிகொண்ட
[13] சொல்லுதற்கரிய
[14] முத்தை
[15] மிக்க ஒளியைக்கொண்ட

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு