ஆதி பராபரனின் சுதனே


எனக்காகவே பாடுகள் பட்டீரோ?

162. (180) ஆகிரி                                          சாபுதாளம்

புலம்பல்

1.         ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா,-எனக்
            காகவே இத்தனை பாடுகள் பட்டீரோ, யேசுநாதா?
            தீதணுகாத பராபரன் சேய் அல்லோ, யேசுநாதா?-நீர்
            செய்த குற்றம் அணுவாகிலும் தான் உண்டோ, யேசுநாதா?
            பாதகன் நான் அல்லோ கட்டுண்ண வேண்டிய தேசுநாதா?-சற்றும்
            பாவம் இல்லாத நீர் கட்டுண்ணப் பட்டதேன், யேசுநாதா?
            வாதை எனக்கு வரத்தகும் அல்லவோ, யேசுநாதா?-சற்றும்
            மாசணுகாத நீர் வாதைக்குள் ஆனீரோ, யேசுநாதா?

2.         மத்யஸ்தனாய் எனக்காக வந்தீர் அல்லோ, யேசுநாதா?-இந்த
            வஞ்சகன் சொந்தப் பிணையாளி நீர் அல்லோ, யேசுநாதா?
            எத்தனை பாதகம் செய்தவனாகிலும், யேசுநாதா?-எனை
            ரட்சிப்பதுன் கடன் அல்லாமல், ஆர் கடன், யேசுநாதா?
            சத்துரு நான் என் றறிந்தும் இருந்தீரே, யேசுநாதா?-கெட்ட
            சண்டாளன் சிந்தையை முற்றும் அறிவீரே, யேசுநாதா?
            சித்தம் இரங்கி, எனை முகம் பார்க்கவே, யேசுநாதா?-என்னைத்
            தேடி, வலிய வரத் தயவானீரோ, யேசுநாதா?

3.         பத்தம் இல்லாததுரோகி நான் அல்லவோ, யேசுநாதா?-உமைப்
            பாடுபடுத்தின பாதகன் நான் அல்லோ, யேசுநாதா?
            பெத்தரிக்கமான பெருமையினாலே நான், யேசுநாதா?-கெட்ட
            பேயைச் சிநேகித்து, இக்கோலம் ஆகினேன், யேசுநாதா?
            புத்தி யில்லா மிருகம்போல் ஆயினேன், யேசுநாதா?-மனம்
            போன வழியெல்லாம் போய் அலைந்தேங்கினேன், யேசுநாதா!
            சித்தம் வைத்தென் பேரில் திருக்கடைக் கண்ணோக்கி, யேசு நாதா!-உன்தன்
            சீர்பதம் சாஸ்வதம் சேவை புரியச்செய், யேசுநாதா?

- வே. சாஸ்திரியார்
           

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு