கிருபை கூரும் ஐயனே


கிருபைகூரும் ஐயனே

173. (214) மோகனம்                                      ஆதிதாளம்

பல்லவி

                        கிருபை கூரும் ஐயனே;-பாவி என்
                        சிறுமை தீரும், மெய்யனே.

அனுபல்லவி

                        பொறுமையே மிகுந்த அருமை தேவனே, நீர். - கிருபை

சரணங்கள்

1.         ஆறு லட்சண தேவா,-அடியார்க்குத்
            தேறுதல் அருள்தா, வா;-திருமறை
            கூறும் கருணை நாவா,-குறை அறப்
            பேறு பெறச் செய் ஜீவா,-பெரியவா,
            ஈறிலா துயர்ந்த மாறிலா வஸ்துவே, நீர் - கிருபை

2.         பத்தர் தொழும் சருவேசா,-பரிந்தருள்
            வைத்த சத்திய வாசா,-மகா பரி
            சுத்தக் கிருபையின் நேசா,-சுயாதிப
            முத்தொழில் தரும் ஈசா, முழுதும் என்
            மத்தியஸ்தனான நித்ய கிறிஸ்துவே, நீர் - கிருபை

3.         பாவத்தின் வழி நடந்தேன்,-பசாசுடன்
            சாபத்திலே கிடந்தேன்,-சதா நித்ய
            கோபத்தையே அடைந்தேன்,-கொடுமையின்
            ஆபத்தால் மனம் உடைந்தேன்,-அடிமையை
            மாபத்திரத் தோடென் பரிதாபத்தைப் பார்த் திரங்கி. - கிருபை

4.         சரணம், சரணம், நாதா!-தவிக்கிற
            தருணம், தருணம், வேதா!-தயாபர
            கிரணம் இலங்கும் பாதா!-கிலேசங்கள்
            திரணம்[1] உறாத நீதா!-திடுக்கிடும்
            மரண வேளையிலும் கரணம்[2] மயங்கும் போதும். - கிருபை

- வே. சாஸ்திரியார்


[1] அற்பம்
[2] புத்தி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு