ஜென்மமார் கருவிலே வினைவிடம்


நன்மையேனுஞ்செயத் திறனிலேன்

153. நவரோஜ்                                                         சாபு தாளம்

1.         ஜென்மமார் கருவிலே வினைவிடம்[1] தீண்டலால்
            நன்மனோ தத்துவ நாசமா யினவெலாந்
            தின்மையே செயவருந் திறனுளேன், சிறியவோர்
            நன்மையே னுஞ்செயத் திறனிலேன், நவையினேன்.[2]

2.         நான்பிறந் ததுமுயிர்ச் சுமையினா னலியவோ
            கான்பிறங் கலினுறுங் கதழ்விடப்[3] பாந்தளில்[4]
            ஊன்பிறங் குடல்வளர்த் துழலுவேன், உணர்விலேன்,
            ஏன்பிறந் தேன்கொலாம் ஏழையிவ்வுலகினே?

3.         அன்னையாய் அப்பனாய் அன்றுதொட் டின்றுமட்-டு
            என்னையாய் பொடுபுரந் தென்றுநன் றேதரும்
            தன்னையே நிகர்வதோர் தம்பிரான் தயைமறந்-து
            என்னையே முப்பகைக் கீடழித் தினைகுவேன்.[5]

4.         ஓரணுத் துணையுநல் லுணர்விலேன் உலகுசெய்
            கோரணிக்[6] குளமுடைந் திடையுமோர் கோழையான்,
            ஆரணத் துரைபடிந் தயர்வுயிர்த் திலனினி
            மாரணக்[7] கடல் குளித் தயர்வனோ மதியிலேன்?

5.         எப்பெரும் பதகரும்[8] இதயநொந்; தேங்கிவந்-து
            அப்பனே பிழைபொறுத் தருளு மென் றடையிலோர்
            ஒப்பரும் புதல்வனுக் குருகிமன் னிப்பமென்-று
            இப்பெருஞ் சுருதிதந் திறைமறந் திடுவரோ?

- எ.ஆ. கிருஷ்ணப்பிள்ளை


[1] விஷம்
[2] குற்றமுள்ளேன்
[3] கோபிக்கும் விஷமுள்ள
[4] பாம்பைப்போல
[5] அழுவேன்
[6] பாசாங்கு
[7] மரண
[8] சண்டாளரும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு